சென்னை – ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிற்கு மத்திய தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.
அறிக்கையில், சென்னை – ஹைதராபாத் புல்லட் ரயில் வழித்தடத்திற்காக தமிழகத்தில் 223.4 ஹெக்டேர் நிலம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 61 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் திட்டத்தில், சென்னை சென்ட்ரல் முதல் தண்டையார்பேட்டை வழியாக மீஞ்சூர் வெளிவட்ட சாலை வரை 11.6 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. வழக்கமான ரயில்கள் இயக்கப்படும் கூடூர் வழித்தடத்திற்கு பதிலாக, திருப்பதி வழித்தடம் தேர்வு செய்ய தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம், தற்போது 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் வெளிவட்டச் சாலை என இரண்டு புல்லட் ரயில் நிலையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டு, வழித்தடம் மற்றும் ரயில் நிலைய இடங்களை விரைந்து இறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்றும், புல்லட் ரயில் திட்டத்தை தமிழகத்தின் நீண்டகால உள்கட்டமைப்பு மாஸ்டர் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.