செட்டிநாட்டின் வளமான நகை பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவின் முதல் செட்டிநாடு நகை அருங்காட்சியகம் “பெட்டகம்” காரைக்குடியில் இன்று திறந்துள்ளது.
அருங்காட்சியகத்தை நிறுவிய மீனு சுப்பையா, பாரம்பரியத்தை பாதுகாப்பது அவசியம் எனக் கூறி, இது ஒரு எளிய முயற்சி என்றும், செட்டிநாட்டு நகைகளைப் பாதுகாப்பதற்கும் காப்பகப்படுத்துவதற்குமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய நகைகள் ஆவணப்படுத்தல்
செட்டிநாட்டு பகுதிகளில் பழமையான நகைகள் குறித்த தகவல்கள் முற்றிலும் சேகரிக்கப்படாமல் இருந்ததால், அவை குறித்த ஆவணங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனை நிரப்பும் நோக்கில், மீனு சுப்பையா, காரைக்குடி மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும் பயணம் செய்து, செட்டிநாட்டு நகைகள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் மற்றும் வடிவமைப்புகளை சேகரித்துள்ளார்.
மேலும், கோயில் அறக்கட்டளைகளின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டு, பழங்கால நகைகளின் வடிவமைப்புகள் மற்றும் முக்கிய விவரங்கள் அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்கு வழிகாட்டி
“பெட்டகம்” அருங்காட்சியகத்தை பார்வையிட விரும்பும் அனைவரும், concierge@meenusubbiah.luxe என்ற மின்னஞ்சல் அல்லது 95665 03736 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம், செட்டிநாட்டு நகை பாரம்பரியத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் மற்றும் பாதுகாப்பதில் முக்கிய பங்களிப்பு செய்யும் எனக் கருதப்படுகிறது.