உலக ஜூனியர் பாட்மிண்டன்: இந்தியாவின் தன்வி சர்மா அரையிறுதிக்கு — பதக்கம் உறுதி!
குவாஹாட்டியில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் 16 வயது இளம் வீராங்கனை தன்வி சர்மா சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கம் உறுதி செய்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், தன்வி சர்மா ஜப்பான் வீராங்கனை சகி மட்சுமோடோவுடன் மோதினார். கடுமையான போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தன்வி, 13–15, 15–9, 15–10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி செய்துள்ளார்.
இந்த சாதனையால் தன்வி சர்மா, 17 ஆண்டுகளில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற இருக்கிறார்.
மற்றொரு கால் இறுதியில், இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் அன்யாபட் பிச்சிட்ஃபோனிடம் 12–15, 13–15 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இப்போட்டி 32 நிமிடங்களில் முடிவடைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில், இந்திய ஜோடி பவ்யா சாப்ரா – விசாகா டோப்போ இணை, சீன தைபேவின் ஹங் பிங் ஃபூ – சோ யுன் ஜோடியிடம் 9–15, 7–15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.