பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: 143 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது ஆர்ஜேடி
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தனது 143 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பட்டியலின்படி, கட்சியின் இளம் தலைவர் மற்றும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதேபோல், ரேணு குஷ்வாஹா – பிஹாரிகஞ்ச் தொகுதியில், அருண் குப்தா – பர்ஹாரியா தொகுதியில், மற்றும் விஷால் ஜெய்ஸ்வால் – மகாராஜ்கஞ்ச் தொகுதியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணி (மகா கூட்டணி) கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியும் மேலும் 6 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை அந்தக் கட்சி மொத்தம் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 121 தொகுதிகளுக்கான வேட்புமனுத் திரும்பப்பெறும் கடைசி நாள் இன்று (அக்.20) என்பதால், இந்தப் பட்டியல்கள் தேர்தல் சூழலை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.