இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் பெண்ணின் பரஸ்பர விவாகரத்து மனுவை ஏற்க மறுத்த அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதி, திருமணத்திற்கு சில மாதங்களுக்குப் பிறகு பரஸ்பர சம்மத விவாகரத்துக்காக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் ஆவணங்களை பரிசீலித்த நீதிமன்றம், கணவன் இந்து, மனைவி முஸ்லிம் என்பதால் பரஸ்பர விவாகரத்தை வழங்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தது.
இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி,
- மனைவி பிறப்பால் முஸ்லிம் என்றாலும்,
- அவர் இந்து முறைப்படி வாழ்ந்து வருகிறார்,
- இருவரும் இந்து மரபுகளுடன் கோவிலில் திருமணம் செய்துள்ளனர்
என்பது ஆவணங்களில் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இத்தகவல்களை அம்பத்தூர் நீதிமன்றம் தெரிவித்தபோதும் அவை ஏற்கப்படாதது தவறு என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. “திருமணம் முழுமையாக இந்து சடங்குகளின் மூலம் நடைபெற்றுள்ளது. மனைவியும் இந்துவாகவே வாழ்ந்து வருகிறார். இப்படியிருக்க முஸ்லிம் என்பதையே காரணமாகக் கொண்டு விவாகரத்து மனுவை நிராகரித்தது சட்டத்துக்கு முரணானது” என்று நீதிபதி தெரிவித்தார்.
இதனால் வழக்கை மீண்டும் விசாரிக்க அம்பத்தூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நான்கு வாரங்களுக்குள் இறுதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.