இந்தியா–தென் ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “முதல் டெஸ்ட் போட்டிக்கு கொல்கத்தா மைதானம் விளையாட முடியாத அளவுக்கு கடினமானது அல்ல. இது போன்ற ஆடுகளத்தையே நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆடுகள பராமரிப்பாளர் இதை நன்றாக தயார் செய்தார்.
இந்த மைதானம் வீரர்களின் மன உறுதியை சோதிக்கும் விதமாக அமைந்தது. அக்சர் படேல், தெம்பா பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். சிலர் கூறுவது போல, இது சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கலாம்; ஆனால் முதல் இன்னிங்ஸில் அதிக விக்கெட்களை வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தனர் என்பதை நாம் மறக்கக்கூடாது.
நாங்கள் விளையாடும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று கேட்டோம். இதனால் டாஸ் வெல்வது முக்கியமில்லை. எந்த சூழலும், எந்த மைதானத்திலும் இந்தியா விளையாட தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா 15 ஆண்டுக்குப் பிறகு இந்தியா மண்ணில் வெற்றி
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 15 ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றி பெற்றுள்ளது.
முன்பு 2010 ஆம் ஆண்டு இந்தியா மண்ணில் வெற்றியடைந்த தென் ஆப்பிரிக்கா, அதன் பின்னர் 7 டெஸ்ட் போட்டிகளில் 6 தோல்வி, 1 டிராவே சந்தித்தது. இவ்வாறே 15 ஆண்டு காலம் வெற்றி கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போதைய வெற்றி பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணிக்கு முக்கிய சாதனையாகும்.