நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு முட்டைக்கான பண்ணைக் கொள்முதல் விலை 595 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாமக்கல் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவை தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்கின்றன. உற்பத்தியாகும் முட்டைகள் தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
நாமக்கல் முட்டைகளுக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நிர்ணயம் செய்கிறது. 2024 டிசம்பர் 9-ஆம் தேதி ஒரு முட்டையின் விலை 590 பைசாவாக இருந்தது. இது அப்போது வரலாற்றிலேயே அதிக விலை. ஆனால் கடந்த வாரம் தொடக்கம் முட்டை விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது.
நேற்று நடந்த NECC கூட்டத்தில், தலைவர் சிங்கராஜ் தலைமையில், விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் புதிய பண்ணைக் கொள்முதல் விலை 595 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகால நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் இது மிக உயர்ந்த விலையாகும். குளிர்காலம் ஆரம்பமானதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கான காரணம் என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
பிற நகரங்களில் முட்டை விலை (பைசா):
சென்னை – 660
டெல்லி – 660
மும்பை – 670
கொல்கத்தா – 685
பெங்களூரு – 645
ஹைதராபாத் – 605
பர்வாலா – 621
மைசூர் – 610
விஜயவாடா – 625
ஹொஸ்பேட் – 585
உயிர் கோழி விலை:
ஒரு கிலோ பிராய்லர் கோழி – ரூ.104
முட்டைக்கோழி – ரூ.112