முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் நினைவுகூரப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதிக்கு அருகே அமைந்துள்ள நேருவின் சிலையடியில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேருவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, எம்.எல்.ஏக்கள் ஜெ.எம். அசன் மவுலானா, எஸ்.ஆர். ராஜா, துணை மேயர் மு. மகேஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் (பொறுப்பு) வே. அமுதவல்லி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா. வைத்தியநாதன், கூடுதல் இயக்குநர் எஸ். செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் நேருவின் உருவப்படத்திற்கு மலர்தூவினர்.
பின்னர் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி – பரிசுகள் வழங்கல்
ஜவஹர்பால் மஞ்ச் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வப்பெருந்தகை பரிசுகள் வழங்கினார்.
அதே நிகழ்ச்சியில், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நவுசத் அலி தயாரித்த ‘ஹூ இஸ் ஷி’ என்ற குறுந்தகடையும் வெளியிடப்பட்டது. மேலும், விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்கள், வீராங்கனைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், அசன் மவுலானா, மாநில காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கீழானூர் ராஜேந்திரன், டாக்டர் விஜயன், அமைப்புச் செயலாளர் ராம்மோகன், மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சிந்துஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.