சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று (நவ.10) நேரில் ஆஜரானார்.
வழக்கின் பின்னணி:
டிஎன்பிஎஸ்சி 1998 முதல் 2002 வரை நடத்திய தேர்வுகள் மூலம் 53 அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 பேர் பணியில் சேராததால், அந்த இடங்களில் தங்களை நியமிக்கக் கோரி மானுவேல் அரசு மற்றும் ராஜன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இருவரையும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்க உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் 2007-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். பின்னர், தங்களை புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில், நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை நிறைவேற்றாததால், இருவரும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், நீதிபதி இளந்திரையன், உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விசாரணைக்கு பிறகு, நீதிபதி வழக்கை டிசம்பர் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.