நெல்லை மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சார்பு ஆய்வாளர் சரவணன் தாக்கல் செய்த மனுவுக்கு, சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் (27), காதல் பிரச்சனை காரணமாக கடந்த ஜூலை 27 அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல் சார்பு ஆய்வாளர் சரவணன், அவரது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் மகன் சுர்ஜித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சரவணனும் சுர்ஜித்தும் தற்போது காவலில் உள்ளனர்.
சரவணன் தாக்கல் செய்த மனுவில், “சம்பவம் நடந்தபோது நான் ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியானபின் தான் அதைப் பற்றி அறிந்தேன். கவின் கொலை வழக்குடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நெல்லை நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. தற்போது 98 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், தன்னை விடுதலை செய்யுமாறு மனுவில் கோரியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி கே. முரளி சங்கர், சிபிசிஐடி டிஎஸ்பி மற்றும் கவின் தாயார் தமிழ்செல்வி ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணை நவம்பர் 17-க்கு ஒத்திவைக்கப்பட்டது.