தனிப்பட்ட பிரச்சினைகள் அல்லது உணர்ச்சிப் பூர்வமான தகராறுகளை தீர்க்கும் கருவியாக குற்றவியல் சட்டங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து, ஒரு பாலியல் புகார் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் மீது, திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கை ரத்து செய்ய சரவணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, உத்தரவில் கூறியதாவது:
“மனுதாரர் மற்றும் புகார்தாரர் 2020 முதல் 2025 வரை உறவில் இருந்தனர். மனுதாரர் வழக்கறிஞர் என்பதால் விளைவுகளை நன்கு அறிவார். உறவு தொடங்கியபோது இளம் பெண்ணை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இது குற்றமாகப் பார்க்க முடியாது.”
நீதிபதி மேலும் கூறியதாவது:
“இப்போது திருமணத்துக்கு முந்தைய நெருக்கமான உறவுகள் சாதாரணமாகிவிட்டன. இவ்வாறான உறவுகள் பாசம், பரஸ்பர விருப்பம் அல்லது உணர்வுகளின் அடிப்படையில் ஏற்படுகின்றன. இது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அல்ல. ஒருவரின் தனிப்பட்ட நடத்தை அல்லது ஏமாற்றத்தை சட்ட வழக்காக மாற்ற முடியாது. வற்புறுத்தல் அல்லது ஏமாற்றம் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிடும்.”
அதுமட்டுமின்றி, இருவரும் படித்தவர்களாக இருந்ததால், அவர்களுக்கிடையேயான உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையில் நடந்தது என்றும், பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பால் அதை குற்றவியல் வழக்காக மாற்ற முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
“உணர்ச்சி அடிப்படையிலான உறவுகளை குற்றமாகக் கருதுவதற்கு சட்டம் ஒரு கருவி அல்ல. சமீபத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன. தன்னார்வத்தால் ஏற்பட்ட உறவுகளை, பின்னர் ஏமாற்றம் எனக் காட்டுவது சரியானது அல்ல,” என்று நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், வழக்கறிஞர் சரவணனுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.