தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால்,
- நாளை (நவ.12) தென் தமிழகத்தின் சில பகுதிகளில்,
- நவம்பர் 13 முதல் 15 வரை சில இடங்களில்,
- மேலும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில்
இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன், திருநெல்வேலி மலைப்பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது.
அதே நேரத்தில், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை பதிவுகளின்படி,
- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ.,
- திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 3 செ.மீ.,
- ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2 செ.மீ.,
- திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 1 செ.மீ.
மழை பதிவாகியுள்ளது எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.