“நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் காசியுடன் தொடர்பு உள்ளது” – சென்னை ஐஐடியில் ஆளுநர் ஆர். என். ரவி
இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் காசியுடன் ஆன்மிகத் தொடர்பு உள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற ‘காசி தமிழ் சங்கமம் 4.0’ குறித்த விளக்க நிகழ்ச்சியை நேற்று அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:
“காசி தமிழ் சங்கமம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் விளைவு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதியுக்கும் காசியுடன் ஆழமான உறவு உள்ளது. காசி இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் எனலாம்,” என்றார்.
“இத்தகைய நிகழ்வுகளை நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. பலரை தேர்வு செய்து அவர்களை கலந்து கொள்ளச் செய்வது கடினமான பணியாகும். இதனை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பாக செய்து வருகிறார்,” என பாராட்டினார்.
“கலாச்சாரம் என்பது அரசால் கட்டாயப்படுத்தி உருவாக்கப்படும் ஒன்று அல்ல; மக்களின் மனங்களில் எழும் உணர்வு. அதனை அரசியல்படுத்தக் கூடாது,” என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’ விழா ‘தமிழ் கற்கலாம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 300 உத்தரப் பிரதேச மாணவர்கள் தமிழகம் வந்து தமிழ் மொழி கற்க உள்ளனர்.
“தமிழை கற்பிக்கும் முயற்சிகள் மத்திய அரசின் முக்கியப் பணியாகும். அசாமிலிருந்து வந்த மாணவர்களுக்கு ராஜ்பவனில் தமிழ் கற்றுக் கொடுத்தோம். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி; அதை அனைத்து இந்தியர்களிடமும் பரப்புவதே எங்கள் நோக்கம்,” என ஆளுநர் கூறினார்.
மேலும் அவர் கூறினார்:
“மார்கழி விழாவுக்காக சென்னை நகர சபாக்கள் தயாராகி வருகின்றன. ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற வாக்கியம் அரசியல் வாசகம் அல்ல, உணர்ச்சி பூர்வமான ஒன்று. பாரதம் என்பது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மக்களைக் கொண்ட புனித தேசம். நாம் இழந்த கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷையன், இயக்குநர் சந்திரசேகரன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.