முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது — மத்திய கண்காணிப்பு குழுவின் ஆய்வு அறிக்கை
முல்லைப் பெரியாறு அணையை மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று (நவம்பர் 10) நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின், அணை முழுமையாக பலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண, உச்சநீதிமன்றம் தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க முன்பே உத்தரவிட்டது. அதன்படி, மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் (NDSA) சார்பில் 7 பேர் கொண்ட முக்கியக் குழுவும், ஒரு துணைக்குழுவும் அமைக்கப்பட்டன.
இக்குழுக்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அணையின் நிலைமையை மதிப்பீடு செய்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்து வருகின்றன. கடந்த மார்ச் 22ஆம் தேதி அணை கடைசியாக ஆய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இன்று குழுவினர் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
குழுத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில், மத்திய குழுவினர் தேக்கடியில் இருந்து படகில் பயணம் செய்து அணைக்குச் சென்றனர். அங்கு மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, நிலநடுக்க மற்றும் அதிர்வு கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன.
பின்னர், 4-வது மதகை திறந்து செயல்பாடு சரிபார்க்கப்பட்டது. மேலும், அணையில் ஏற்படும் நீர்கசிவு அளவு பரிசோதிக்கப்பட்டது. தற்போதைய நீர்மட்டம் 134.80 அடி எனும் நிலையில், நீர்கசிவு ஒரு நிமிடத்திற்கு 93.6 லிட்டர் என பதிவானது. இது தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பான அளவாகவே கருதப்படுவதால், அணை உறுதியாக உள்ளதாக குழு உறுதிப்படுத்தியது.
இந்த ஆய்வில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பேரிடர் மற்றும் மீள்தன்மை பிரிவு உறுப்பினர் ராகேஷ் டோடேஜா, இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் ஆனந்த் ராமசாமி, தமிழ்நாடு நீர்வளத் துறை செயலாளர் ஜே. ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழு நிபுணர் சுப்ரமணியன், மற்றும் கேரள நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பொதுவாக, ஆய்வுக்குப் பின் குமுளி ஒன்னாம் மைல் பகுதியில் உள்ள நீர்வளத் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். ஆனால், இந்த முறை அந்தக் கூட்டம் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் என குழுவினர் தெரிவித்தனர்.