70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு திட்டம் – நவம்பர் 10ல் உதயநிதி தொடங்கி வைக்கிறார்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்காக வடிவமைக்கப்பட்ட “திருக்கோயில்கள் சார்ந்த சிறப்பு செய்யும் திட்டம்” நாளை (10.11.2025) சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்ததாவது:
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்வழி, 2025–26 நிதியாண்டு சட்டமன்ற அறிவிப்பில் அறிவிக்கப்பட்டபடி, மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து 2,000 மூத்த தம்பதியர்கள் திருக்கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படுவர்.
சென்னை இணை ஆணையர் மண்டலங்களைச் சேர்ந்த 200 தம்பதியர்களுக்காக இத்திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் நாளைத் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ் தம்பதியருக்கு ரூ. 2,500 மதிப்பிலான வேட்டி, சட்டை, புடவை, இரவிக்கை, பழங்கள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் வழங்கப்படும்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் திருக்கோயில் சார்பில் ரூ. 3.40 கோடி செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் திறந்து வைக்கிறார். இதில் —
- திருவல்லிக்கேணி நல்லத்தம்பி தெருவில் ரூ. 2.05 கோடி மதிப்பிலான துணை ஆணையர், செயல் அலுவலர், கண்காணிப்பாளர் குடியிருப்புகள்,
- பார்த்தசாரதி தெருவில் ரூ. 1.35 கோடி மதிப்பிலான பணியாளர் குடியிருப்புகள் — ஆகியவை அடங்கும்.
இந்நிகழ்ச்சிகளில் ஆதீன பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்