கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் — செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
கரூரில் சிஐஐ (Confederation of Indian Industry) மற்றும் யங் இன்டியன்ஸ் அமைப்புகளின் சார்பில் இன்று (நவம்பர் 9) நடைபெற்ற மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு “கரூர் விஷன் 2030” நான்காவது பதிப்பாக, கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. பங்கேற்பாளர்களை சிஐஐ தலைவர் பிரபு வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் வ. செந்தில் பாலாஜி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து,
“கரூரின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியாக உயர்த்த வேண்டும். நம் முன்னோர்கள் கட்டியெழுப்பிய கரூரை மேலும் மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு பெருமையாக வழங்குவதே நம் கடமை,”
எனச் சிறப்புரையாற்றினார்.
பின்னர், செந்தில் பாலாஜி, ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா ஆகியோர் புறாக்களை பறக்கவிட்டு, கொடியசைத்து மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், மாநகராட்சி ஆணையர் சுதா, வட்டாட்சியர் மோகன்ராஜ், சிஐஐ துணைத் தலைவர் பெருமாள், யங் இன்டியன்ஸ் தலைவர் யோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணிகளை ஏடிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் டிஎஸ்பி செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.
போட்டியின் பிரிவுகள் மற்றும் பரிசுகள்
பெரியவர்களுக்கு 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ., சிறுவர்களுக்கு (8–14 வயது) 5 கி.மீ. மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. மேலும், பெரியவர்களுக்கான வாக்கத்தான் 3 கி.மீ. பிரிவிலும் நடந்தது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றியாளர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.3,000, மேலும் நான்காம் மற்றும் ஐந்தாம் பரிசாக கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இலவச டி-ஷர்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன.
போக்குவரத்து நெரிசல்
போட்டிகள் நடைபெற்ற காரணமாக கரூர் திரு.வி.க. சாலையில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், லைட்ஹவுஸ் முனை முதல் அமராவதி ஆற்று பாலம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.