திண்டுக்கல் டாஸ்மாக் வருமானம் ரூ.1.16 கோடி நீதிமன்ற கணக்கில் – இழப்பீடு வழக்கில் ஐகோர்ட் அதிரடி
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்காததால், திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் கடைகளின் 20 நாள் வருமானமான ரூ.1.16 கோடி நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து, கல்யாணி உள்ளிட்ட 30 பேர், 2017 ஆம் ஆண்டு தங்களின் நிலம் அரசு கையகப்படுத்தியதாகக் கூறி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில், 2021 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் ரூ.4.37 கோடி இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர் அரசின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டும், இழப்பீடு வழங்கப்படாததால் மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணைந்தனர்.
டாஸ்மாக் வருமானத்தைச் செலுத்த உத்தரவு
இந்த வழக்கு விசாரணையில், திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளின் தினசரி வருமானத்தை மாவட்ட நீதிமன்ற வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உயர் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றாததால், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் மாவட்ட மேலாளர் மீது அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் நேரடி ஆஜர்
இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆஜராகினர்.
அரசுத் தரப்பில், “உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இழப்பீடு வழங்குவது அரசின் பொறுப்பு; டாஸ்மாக் நிறுவனம் வழங்குவது பொருத்தமில்லை,” என வாதிடப்பட்டது.
நீதிமன்றத்தின் கடும் கண்டனம்
இதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
“சாலைப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்கள் பிச்சைக்காரர்களைப்போல் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
பின்னர், டாஸ்மாக் வருமானத் தொகை ரூ.1.16 கோடி நீதிமன்ற வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக பதிவாகியது.
நீதிபதிகள் தொடர்ந்து,
“உயர் நீதிமன்ற உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளின் தினசரி வருமானத்தை மறு உத்தரவு வரும் வரை நீதிமன்ற வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்,”
என்று உத்தரவிட்டனர்.
வழக்கு நவம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.