பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் — அன்புமணி அணியைச் சேர்ந்த 7 பேர் கைது
சேலம் அருகே பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், அன்புமணி அணியைச் சேர்ந்த 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி வடுகநத்தம்பட்டியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் தந்தை தர்மராஜ் மறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அன்புமணி அணியைச் சேர்ந்த சிலர் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடிகள் சேதமடைந்ததுடன், அருள் அணியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்துக்கு தொடர்பாக, ராமதாஸ் அணியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் நடராஜ், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஈடுபட்ட ஏத்தாப்பூர் போலீசார்,
- சின்ன கிருஷ்ணாபுரம் பூவிழி ராஜா (33),
- வடுகநத்தம்பட்டி விக்னேஷ் (25),
- ஆத்தூர் தென்னங்குடிபாளையம் வெங்கடேசன் (37) — (பாமக ஆத்தூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்),
- வாழப்பாடி சரவணன் (30),
- வைத்திய கவுண்டன் புதூர் அருள்மணி (32),
- சின்ன கிருஷ்ணாபுரம் விமல் ராஜ் (22),
- மற்றும் தமிழ்ச்செல்வன் (29) ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்களை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி நவம்பர் 19 வரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.