நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் அதிகாரிகள் — மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு
திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர், தங்களுக்குச் சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டை கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், மனுதாரர்களுக்கு மொத்தம் ₹4,37,42,783 இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற அமர்வு, 8 வாரங்களுக்குள் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் இதுவரை நிறைவேற்றவில்லை.
இதையடுத்து முத்து உள்ளிட்டோர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்து கணேசபாண்டியன் வாதிட, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், “இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது” என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள்,
“திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் அக்டோபர் 16 முதல் நவம்பர் 6 வரை உள்ள வருமான விவரங்களும், வங்கி கணக்கு பதிவுகளும் இணைத்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட மேலாளர் நாளை (நவம்பர் 7) நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்,”
என்று உத்தரவிட்டனர்.