பிஹாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்: 121 தொகுதிகளில் 1,314 வேட்பாளர்கள் போட்டி
பிஹார் சட்டமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 6) முதல்கட்டமாக நடைபெறுகிறது. மொத்தம் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறும்.
18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த முதல்கட்டத் தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.75 கோடி வாக்காளர்களுக்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
2020 தேர்தலில், 121 தொகுதிகளில் மெகா கூட்டணி 61, என்டிஏ 59, லோக் ஜன சக்தி கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றது. இதனால் இம்முறை இரு கூட்டணிகளுக்கும் இம்முதல் கட்ட வாக்குப்பதிவு மிக முக்கியமானதாக உள்ளது.
முதல் முறையாக தேர்தலில் பங்கேற்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கும் இந்த கட்டம் சவாலானதாக உள்ளது. கடந்த முறை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மெகா கூட்டணி ஆட்சிக்கு வர தவறியது.
இம்முறை சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி (எல்ஜேபி) என்டிஏ கூட்டணியுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை ஆர்ஜேடி 42, காங்கிரஸ் 8, இடதுசாரிகள் 11, பாஜக 32, ஜேடியு 23 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன.