தொடர்ச்சியான கனமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு
முல்லைப்பெரியாறு அணைக்கு கனமழையால் நீர்வரத்து திடீரென அதிகரித்து, நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது. இதனால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, கேரளப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழகம்–கேரள எல்லைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, அணைக்கு வரும் நீர்வரத்து வேகமாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை 2,748 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 11 மணிக்குள் 40,733 கனஅடியாக உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 132 அடியில் இருந்து 138 அடியாக உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் கேரளப் பகுதியை நோக்கி அமைந்துள்ளன. தமிழகப் பகுதிக்கு அதிகபட்சமாக 2,400 கனஅடி நீர் மட்டுமே திறக்கும் வசதி உள்ளது. எனவே வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், கேரள அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அனுப்பி, அம்மாநில வழியே நீர் திறப்பது வழக்கம்.
தற்போது, நீர்த்தேக்கத்திற்கான விதிமுறைப்படி (Rule Curve) 137.75 அடி மட்டுமே தேக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அணை அதனை மிஞ்சும் நிலையில் உள்ளது.
இதையடுத்து, இடுக்கி மாவட்டத்துக்கு முதல்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை 8 மணிக்கு 3 மதகுகள் முக்கால் மீட்டர் உயர்த்தப்பட்டு, விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப, வெளியேற்றப்பட்ட நீரின் அளவு மாற்றப்பட்டது. மதியம் 1 மணிக்குள் 7,163 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நீர் இடுக்கி மாவட்டத்தின் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிப்பெரியாறு, மஞ்சுமலை, உப்புத்துறை, ஏலப்பாறை வழியாக பாய்வதால், அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, ஆற்றங்கரையில் வசித்து வந்த 43 குடும்பங்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
தமிழகப் பகுதிக்கு தற்போது விநாடிக்கு 1,400 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“ஏற்கெனவே தேனி மாவட்டத்தின் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு குறைந்த அளவிலேயே நீர் வெளியேற்றப்படுகிறது,” என்றனர்.