பொள்ளாச்சியில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில், சனிக்கிழமைகளில் மற்றும் பிற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் இடமாகும். இக்கோயிலில் இரவு நேரங்களில் மகாலிங்கம் (60), ஜெயக்குமார் (58) ஆகியோர் காவலர்களாக பணிபுரிந்து வந்தனர்.
நேற்று மாலை முதல் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், சிற்றோடைகளும் ஆறுகளும் பெருக்கெடுத்து ஓடியன. இன்று அதிகாலை பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆஞ்சநேயர் கோயில் முழுவதும் நீரில் மூழ்கியது.
இதில் கோயிலுக்குள் இருந்த இரு காவலர்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் கடுமையாக போராடி, கயிறு உதவியுடன் இருவரையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் ஆற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இதுபோன்ற வெள்ளச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில், இந்துக் சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு புதியதாக மேம்பாலம் அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.