கரூர் கூட்ட நெரிசல் விபத்து: 10-க்கும் மேற்பட்ட போலீஸாரிடம் சிபிஐ விசாரணை
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
அக். 30 அன்று கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் அக். 31 அன்று வேலுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. மேலும், அக். 31 மற்றும் நவம்பர் 1 தேதிகளில் சம்பவம் நடந்த இடத்தை 3D லேசர் ஸ்கேனர் மூலம் ஆய்வு செய்து அளவீடு செய்ததோடு, அப்பகுதி வணிகர்களிடமும் தகவல் சேகரித்தது.
இதற்கடுத்து, அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. நவம்பர் 2 அன்று கரூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்பில் செயல்படும் ராம்குமாரை தேடி சென்ற சிபிஐ குழு, அவர் இல்லாததால் பின்னர் மாளிகைக்கு திரும்பியது.
இதன்பின், மூவர் கொண்ட சிபிஐ குழு ரயிலில் சென்னை சென்று பனையூர் தவெக அலுவலகத்திலும் விசாரணை மேற்கொண்டது. பிரச்சார வாகனத்தில் இருந்த நான்கு சிசிடிவி கேமராவின் பதிவு மற்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்களை சம்மன் மூலம் கோரினர்.
கரூர் சுற்றுலா மாளிகையில் பேக்கரி உரிமையாளர்கள், கேட்டரிங் கல்லூரி உரிமையாளர் உள்ளிட்ட பலரிடம் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. செப். 27 அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகிய 10-க்கும் மேற்பட்ட போலீஸாரும் விசாரணைக்கு ஆஜராகினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சம்பவ நேரத்திலான சூழ்நிலை குறித்து சிபிஐ அலுவலர்கள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.