ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு
போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து நவீன மருத்துவ சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது.
நிறுவன வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னை புற்றுநோய் மையத்தின் துணை செயல் தலைவர் மற்றும் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் எப். ஹேமந்த் ராஜ் மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய டாக்டர் ஹேமந்த் ராஜ், “புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையுடன் மனச்சார்ந்த ஆதரவும் அவசியம். அவர்களுடன் நேரம் செலவிட்டு, கவலைகளை கேட்டு, குடும்பத்தினருக்கும் சிகிச்சை முறையை விளக்குவது முக்கியம். புதிய ஆராய்ச்சிகளில் இளம் மருத்துவர்கள் ஈடுபட வேண்டும். சென்னை புற்றுநோய் மையத்துக்கும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பதிவுக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்தப்படுவதால் சிகிச்சை தரம் மேலும் மேம்படும்” என்று கூறினார்.
துணைவேந்தர் டாக்டர் உமா சேகர், “இந்த மையம் உலக தரத்திற்குரிய வசதிகளை ஒரே இடத்தில் கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு நெறிமுறையுடன் கூடிய உயர்தர தனிப்பட்ட சிகிச்சை வழங்குவதே இதன் நோக்கம்” என்றார்.
இந்த திறப்பு விழாவில் மருத்துவக் கல்லூரி தலைவர் டாக்டர் கே. பாலாஜி சிங், மருத்துவ மைய இயக்குநர் டாக்டர் ஆர்.பி. சுதாகர் சிங், கண்காணிப்பாளர் டாக்டர் பி. சுரேந்திரன், புற்றுநோய் அறுவைசிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ், கதிர்வீச்சுத் துறை தலைவர் டாக்டர் கே. சதீஷ் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.