உலக சந்தையில் அதிர்வெள்ளம் ஏற்படுத்தும் 2 என்எம் சிப்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கருத்து
இந்தியாவில் உருவாகும் 2 என்எம் சிப் உலக சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
“இன்றைய காலத்தில் தரவு (Data) என்பது கச்சா எண்ணெய்க்கு இணையான முக்கிய வளமாக மாறியுள்ளது. அதேபோல், தரவு மையங்கள் (Data Centers) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைப் போன்றவையாக கருதப்படுகின்றன. இன்று ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதன் தரவு மற்றும் தரவு மையங்களின் வலிமையால் தீர்மானிக்கப்படுகிறது.
இந்த துறையில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு வர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உள்நாட்டில் செமி கண்டக்டர் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் 7 நானோ மீட்டர் மற்றும் 5 நானோ மீட்டர் செமி கண்டக்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், தற்போது உலக நாடுகள் 2 நானோ மீட்டர் (என்எம்) சிப் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தியாவிலும் 2 என்எம் சிப் வடிவமைப்பு நடைபெற்று வருகிறது. இந்தச் சிப் உலக சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும். உலகளவில் சிப் வடிவமைப்பாளர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால், இந்தத் துறையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் வாய்ப்பு உள்ளது,” என அவர் கூறினார்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்திய செமி கண்டக்டர் துறையின் சந்தை மதிப்பு ரூ.3.17 லட்சம் கோடியாக இருந்தது. 2024-ஆம் ஆண்டில் அது ரூ.3.75 லட்சம் கோடியாக உயர்ந்தது. தற்போது, நடப்பாண்டில் அது ரூ.4.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.