சென்னையில் பருவமழையால் உருவான 4,503 சாலை பள்ளங்கள் சரிசெய்யப்பட்டது
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட சாலை பள்ளங்களை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 4,503 பள்ளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
2025-26 நிதியாண்டிற்குள் உட்புற சாலைகளில் தார் சாலை, சிமென்ட் கான்கிரீட் சாலை மற்றும் இணைப்பு கற்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 3,908 சாலைகளில் இந்தப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதில் 2,790 சாலைகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது 207 சாலைகளில் சிமென்ட் கான்கிரீட் மற்றும் இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேருந்து பாதை சாலைகளில் 79 சாலைப்பணிகள் தொடங்கப்பட்டதில், 63 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சாலையில் சிமென்ட் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மின்வாரியம், குடிநீர் வாரியம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்ற துறைகள் மேற்கொண்ட சாலை வெட்டுப் பணிகளில் மொத்தம் 4,072 இடங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் 3,562 இடங்களில் சீரமைப்பு முடிந்துள்ளது; 489 இடங்களில் பணிகள் செயல்பாட்டில் உள்ளன. பேருந்து பாதை சாலைகளில் 105 இடங்கள் ஒப்படைக்கப்பட்டதில், 95 இடங்களில் சீரமைப்பு செய்யப்பட்டு 10 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்வதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,147 இடங்களில் சாலை சேதம் கண்டறியப்பட்டு, 4,503 இடங்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமான 667 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பேருந்து பாதை சாலைகளுக்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 432 சேத இடங்களில் 349 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன; 83 இடங்கள் பணியில் உள்ளது.
மேலும், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலை ரூ.5 கோடி செலவில், ஆற்காடு சாலையின் மெட்ரோ ரயில் பணி காரணமாக சேதமான பகுதிகள் ரூ.7 கோடி செலவில் மற்றும் சூளை டி.மெல்லோஸ் சாலை ரூ.1.91 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.