ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்ற உத்தரவு
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்துள்ள அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் சொந்த இடங்களில் சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நீதிமன்றம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி வழங்கவும், மேலும் அதுகுறித்து மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு தடை விதித்தது.
ஆனால், அந்த தடை உத்தரவைக் கடந்து மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி, ஆகாஷ் பாஸ்கரன் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையில், உயர் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதனைத் தொடர்ந்து, வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நேரத்தில், நீதிமன்றம் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் பிரதீப் குமார் உபாத்யாயா மற்றும் நிர்வாகப் பதிவாளர் நஸ்ரின் சித்திக் ஆகியோர் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்காக தள்ளிவைக்கப்பட்டது.