சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அக்டோபர் 20 முதல் 5 நாட்களுக்கு மாற்றம்
சென்னை: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அக்டோபர் 20 முதல் 24 வரை (5 நாட்கள்) சிறிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், வருடாந்திர பராமரிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அக்டோபர் 20 முதல் 24 வரை, தினமும் காலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும். அந்த நேரத்தில், வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.
காலை 6.30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல மாற்றமின்றி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றம் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகளுக்குள் உள்ள பச்சை மற்றும் நீல வழித்தடங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் நிறுவனம் விளக்கியுள்ளது.
பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் மூலம் புதிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். கூடுதல் உதவிக்காக, 1860-425-1515 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.