கமுதி பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை
கமுதி அருகே பசும்பொன்னில் இன்று நடைபெறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவிலும், அரசுத் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர். குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை நிகழ்வுகளுடன் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. நேற்று இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி கொண்டு ஊர்வலமாக வந்து, வரிசையில் நின்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இன்று (அக். 30) அரசு விழாவாக குருபூஜை மற்றும் ஜெயந்தி நடைபெறுகிறது. காலை 8.30 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துவார். பின்னர் தேவர் இல்லத்தையும் அவர் பார்வையிடுவார். காந்திமீனாள் நடராஜனை சந்தித்து நலம் விசாரிக்கவும் உள்ளார். மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பசும்பொன் ஹெலிபேடில் அவர் தரையிறங்குகிறார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையிலிருந்து நிலமார்க்கமாக வருகை புரிந்து, காலை 9.30 மணிக்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார். இதையடுத்து, பழனிசாமி, வைகோ, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், சீமான், ஜி.கே. வாசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் மரியாதை செலுத்துவார்கள்.
விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், ராமநாதபுரம் டிஐஜி மூர்த்தி, மாவட்ட எஸ்பி சந்தீஷ் உட்பட 10,000 போலீசார் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.