நகராட்சி நியமன முறைகேடு: நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் – இபிஎஸ்
நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாளர் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாம் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
“நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற்றது. ஆனால் இதில் ₹800 கோடி ரூபாயை தாண்டிய ஊழல் நடந்ததாகவும், வேட்பாளர்களிடமிருந்து ₹25–₹35 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளில் இந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களுடன் ஆவணங்களை, அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு வழங்கியுள்ளது. முதற்கட்ட தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டால்தான் சட்டப்படி அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.
இந்த ஊழலில் எந்த நபரையும் காக்க முயலாமல், உடனடியாக லஞ்ச, ஊழல் தடுப்புத்துறை வழியாக FIR பதிவு செய்ய தமிழக பொறுப்பு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருக்க வேண்டும்.
இளைஞர்களின் அரசுப்பணி கனவை லஞ்ச ஊழலால் சிதைக்கும் திமுக அரசு நடவடிக்கை தவறானது,” என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.