“தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்!” – அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி காலக்கெடு!
புதுடெல்லி:
நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில், தீர்ப்புகளை வழங்குவதற்கான கடுமையான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது நிர்ணயித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவில், “உயர் நீதிமன்றங்கள் எந்தவொரு வழக்கையும் முழுமையாக விசாரித்து முடித்த பின்னர், அதன் தீர்ப்பை ஒத்திவைத்தால் (Reserved Judgment), அதனை அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள்ளாகவே வழங்கிட வேண்டும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, எளிய மக்களின் சுதந்திரத்தோடு தொடர்புடைய ஜாமீன் உத்தரவுகள், வழக்கு விசாரணை முடிந்த அடுத்த நாளே வழங்கப்பட வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் அதன் விபரங்களை உடனடியாகச் சம்பந்தப்பட்ட சிறை நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதன் மூலம், விசாரணைக் கைதிகளாகச் சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்றால், அவர்கள் அதே நாளில் அல்லது அதிகபட்சமாக அடுத்த நாளே சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் உத்தரவு தொடர்பான விளக்கங்களை 7 நாட்களுக்குள் நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியை உயர் நீதிமன்ற இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, வழக்கின் உத்தரவு அல்லது தீர்ப்பின் முழு விபரங்கள் 30 நாட்களுக்குள்ளாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படாவிட்டால், அந்த வழக்கை உடனடியாக வேறொரு நீதிபதிகள் அமர்வுக்கு (Bench) மாற்ற வேண்டும் என்ற அதிரடி விதியையும் உச்ச நீதிமன்றம் புகுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த அதிரடி வழிகாட்டு நெறிமுறைகளை, நாட்டின் அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களும் (Registrars) தத்தமது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் முன்பாக உடனடியாகச் சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் உத்தரவிட்டுள்ளது. இது நீதித்துறையில் பெரும் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.




