கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: தென்னிந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தென்மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், கேஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த லாரிகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPC) போன்ற மத்திய அரசின் ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றன.
மொத்தம் 5,000 கேஸ் டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுகின்றன. ஆனால், இந்த ஆண்டிற்கான புதிய ஒப்பந்தங்களில் சுமார் 700 லாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்காக சங்கத்தினர் ஆயில் நிறுவனங்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியதாலும் தீர்வு கிடைக்காததால் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இன்று நாமக்கல்லில் நடைபெற்ற அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத் தலைவர் சுந்தரராஜன் தலைமையிலான ஆலோசனையில், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:
“ஆயில் நிறுவனங்கள் புதிய ஒப்பந்த விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, 700-க்கும் மேற்பட்ட கேஸ் டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கவில்லை. இதனால் பல உரிமையாளர்கள் கடன் சுமையால் அவதிப்படுகின்றனர். 2016ம் ஆண்டுக்கு மேல் தயாரிக்கப்பட்ட அனைத்து லாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயில் நிறுவன அதிகாரிகள் நாமக்கல் வந்து சங்கத்தினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,” என்றார்.
அவர் மேலும், “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தென்னிந்தியாவில் உள்ள அனைத்து 5,000 கேஸ் டேங்கர் லாரிகளும் இயக்கப்படாது. தகுதியான அனைத்து வாகனங்களுக்கும் வேலை வழங்கும் உத்தரவு வரும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும்,” என்று தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தம் நீடித்தால், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சமையல் கேஸ் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.