நற்பண்பு மிக்க தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்கு: வாஷிங்டனில் தத்தாத்ரேய ஹோசபலே உரை!
வாஷிங்டன்: நற்பண்பு, தன்னம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்கி, அதன் மூலம் தேசத்தை வலுப்படுத்துவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் என்று அந்த அமைப்பின் அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.
தன்னார்வ மக்கள் இயக்கம்:
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், “ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் தொன்மையான கலாசார நெறிமுறைகள் மற்றும் நாகரீக விழுமியங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு தன்னார்வ மக்கள் இயக்கம். சமூகத்தின் மேன்மைக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும் உழைக்கக்கூடிய ‘மனித சமூக மூலதனத்தை’ (Human Social Capital) உருவாக்குவதே எங்களது பிரதான இலக்கு” எனக் குறிப்பிட்டார்.
பேரிடர் கால பணிகள்:
ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகள் குறித்து விளக்கிய அவர், வழக்கமான சமூக சேவைகள் மட்டுமின்றி, நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது சாதி, மதப் பாகுபாடின்றி ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் முன்நின்று நிவாரணப் பணிகளை மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டினார்.
மேற்கத்திய நாடுகளுக்குக் கேள்வி:
தொடர்ந்து பேசிய அவர், மேற்கத்திய நாடுகள் இந்தியாவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்தார். “அமெரிக்கர்கள் இந்தியாவைப் பற்றியும், ஆர்.எஸ்.எஸ் பற்றியும் இன்னும் தவறான புரிதலிலேயே உள்ளனர். இந்தியா இன்று உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதை அவர்கள் கவனிக்கவில்லையா?” என்று தத்தாத்ரேய ஹோசபலே கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் எழுச்சியும், அதன் கலாசார வேர்களும் உலக நாடுகளால் சரியான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.





