மார்லெட் ஏவுகணை ஒப்பந்தம் ரூ.4,155 கோடியில் கையெழுத்து: மோடி, கீர் ஸ்டார்மர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பாதுகாப்புத் துறைக் கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில், ரூ.4,155 கோடியில் மார்லெட் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். 125 பேர் அடங்கிய குழுவுடன் மும்பை வந்த அவர், மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.
அந்த சந்திப்பில், மார்லெட் ஏவுகணை வாங்குதல் உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கூட்டறிக்கையில் கூறப்பட்டதாவது:
“இங்கிலாந்திலிருந்து மார்லெட் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இந்தியாவின் வான்வழி பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும். மேலும், சுயசார்பு இந்தியா (Atmanirbhar Bharat) திட்டத்துடன் இணைந்த வகையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். இதனால் வடக்கு அயர்லாந்தில் சுமார் 700 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.”
மேலும், இந்திய கடற்படைக்காக மின்சார இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற ஒத்துழைப்பு குறித்தும் இரு நாடுகள் இடையே புதிய உடன்படிக்கை கையெழுத்தானது.
சந்திப்புக்குப் பிறகு நடந்த கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் மோடி தெரிவித்ததாவது:
“இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவவுள்ளன. இது இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா–இங்கிலாந்து உறவு, சர்வதேச ஸ்திரத்தன்மைக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருக்கும்.”
அதேநேரத்தில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறினார்:
“இந்தியா மற்றும் இங்கிலாந்து புதிய தலைமுறை கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன. இது எதிர்கால சவால்களையும் வாய்ப்புகளையும் மையமாகக் கொண்டது.”
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பாதுகாப்பு, தொழில்நுட்ப, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.