“டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சி?” – கோவையில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களால் பரபரப்பு!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்குத் டோக்கன் விநியோகம் செய்து அவர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் எனக் கேட்டு, அதற்கேற்ப கூப்பன்களை (Tokens) நிரப்பும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை நேரில் பார்த்த மற்ற கட்சியினர், “தேர்தலில் வெற்றி பெற்றால் செய்ய வேண்டிய பணிகளை இப்பொழுதே எதற்காகச் செய்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செந்தில் பாலாஜி தரப்பினர் டோக்கன் கலாச்சாரத்தைப் புகுத்தி மக்களைக் கவரப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சியினர், இது தேர்தல் விதிமீறல் என்றும், இது குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் கோவை தெற்கு தொகுதி தேர்தல் களத்தில் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.




