“இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்குப் புதிய மருத்துவக் கல்லூரிகள்” – திருப்பூரில் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு!
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜுக்கு ஆதரவாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தாராபுரம் சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர், அங்கிருந்த பிற மொழி பேசும் வாக்காளர்களைச் சந்தித்து ‘தாமரை’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “கடந்த காலங்களில் தமிழகத்தில் அமைந்த இரட்டை இன்ஜின் (மத்திய-மாநில அரசுகளின் இணக்கமான) ஆட்சியின் காரணமாகவே, தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் பல புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தரமான சாலைக் கட்டமைப்புகள் கிடைத்தன. பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் ரயில், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த வளர்ச்சிப் பணிகள் தொடர மீண்டும் ஒருமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தனது பிரசார பாணியில் ஆன்மீகத்தையும் இணைத்துப் பேசும் அவர், “பரப்புரையின் இடையே பஜனை பாடுவது எனது தனிப்பட்ட ஸ்டைல்” என்று கூறி, ‘ஓம் நமசிவாய’ பாடலைப் பாடினார். மத்திய அமைச்சரின் இந்தப் பாடல் மற்றும் பேச்சைக் கேட்டு அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.




