“மாணவர்கள் மீதான விசிக-வினரின் கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது” – பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆவேசம்!
சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) நடத்திய பொதுக்கூட்டத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி “மாணவர்கள் குரல்: மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் ஏபிவிபி அமைப்பினர் அமைதியான முறையில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் புகுந்த விசிக-வினர், அங்கிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தேசத்தை நேசிக்கும் மாணவர்கள் என்பதால், வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காத்ததாகக் குறிப்பிட்ட அஸ்வத்தாமன், விசிக-வினரின் இந்தச் செயல் ஒரு கோழைத்தனமானத் தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய விசிக-வினர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர் அமைப்பின் விழிப்புணர்வு கூட்டத்தில் அரசியல் கட்சியினர் புகுந்து வன்முறை நிகழ்த்திய சம்பவம் குறித்து அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.




