“10 ஆண்டுகளில் செய்யாததை இனி என்ன செய்யப் போகிறார்?” – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு சுந்தர். சி சவால்!
மதுரை மத்திய தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளரும், பிரபல இயக்குநருமான சுந்தர். சி, திமுக வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் என்டிஏ தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் செய்யாத எதை இனிமேல் பி.டி.ஆர் செய்யப் போகிறார் என வினவினார். ஏற்கனவே அவருக்கு இரண்டு முறை வாக்களித்த மக்கள், மூன்றாவது முறையாக ஏமாறத் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய சுந்தர். சி, “நான் அவரைப் போல வெளிநாடுகளில் படித்தவன் கிடையாது; ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் மக்களின் அடிமட்டப் பிரச்சினைகளை நன்கு அறிந்தவன்” என்று குறிப்பிட்டார். தேர்தல் பரப்புரையின் போது மக்கள் அளிக்கும் பெரும் ஆதரவானது, தற்போதைய திமுக அரசின் மீதான கடும் அதிருப்தியையே காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார். திரைத்துறையில் இருந்து அரசியல் களமிறங்கியுள்ள சுந்தர். சி-யின் இந்தப் பேச்சு மதுரையில் அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.




