“மக்களின் கஷ்டங்கள் தெரியாதவர் ஸ்டாலின்” – ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மக்களின் கஷ்டங்கள் சிறிதும் தெரியாமல் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருவதாகவும், அவர் நடைபயணம் செல்லும் போது கூட மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தனது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர் என்றும் அவர் சாடினார். திமுக என்பது மக்களுக்குத் துரோகம் செய்யும் கட்சி என்றும், மக்களிடம் கொள்ளையடிப்பது மட்டுமே அந்த ஆட்சியின் ஒரே குறிக்கோள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் தனது உரையில், “திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் தமிழக மக்கள் கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது; ஆனால், தற்போது சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டார். அத்துடன், திமுக ஆட்சியில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் இபிஎஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.




