‘மோந்தா’ புயல் தீவிரம் பெறுகிறது – இன்று 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் தாக்கத்தால் திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 520 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 570 கி.மீ தொலைவிலும் உள்ளது.
புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறலாம். மேலும் இது இன்றிரவு ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளில், காக்கிநாடா அருகே, மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும் நீடித்து வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வானிலை மையம் தெரிவித்ததாவது —
- திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
மேலும், வடதமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.