“தேர்தலில் போட்டியிடாதது ஏன்?”: அண்ணாமலை விரிவான விளக்கம்!
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
தலைமைக்கு முன்கூட்டியே தகவல்:
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை என்பதை பாஜக தேசியத் தலைமைக்கு ஏற்கனவே முறைப்படி தெரிவித்துவிட்டேன். பாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் நிதின் நபின் ஆகியோரிடம் இது குறித்து முன்பே ஆலோசித்து எனது முடிவைக் கூறிவிட்டேன்” என்றார்.
மேலும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடமும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே, டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்ட வேட்பாளர் சிபாரிசுப் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
முழுநேரப் பிரச்சாரத்தில் அண்ணாமலை:
தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தன்னைப் பயன்படுத்திக் கொள்ள கட்சித் தலைமை எடுத்த முடிவில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்தார். “கட்சி எனக்கு வழங்கியுள்ள இந்தப் பொறுப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களையும் ஆதரித்துத் தீவிரமாகப் பரப்புரை செய்வேன்” என்று அண்ணாமலை உறுதியளித்தார்.
தேர்தல் களத்தில் வேட்பாளராக நிற்பதை விட, மாநிலம் தழுவிய அளவில் கூட்டணி வெற்றிக்காகப் பணியாற்றுவதே தற்போதைய முக்கியக் கடமை என அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.




