“மக்களின் விருப்பத்திற்காகவே மீண்டும் போட்டி”: விளவங்கோடு பாஜக வேட்பாளர் விஜயதரணி உறுதி!
மார்த்தாண்டம்:
தனக்குப் பதவி என்பது எப்போதும் இரண்டாவது பட்சம்தான் என்றும், தொகுதி மக்களின் பேரன்பிற்கும் விருப்பத்திற்கும் இணங்கவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் விஜயதரணி தெரிவித்துள்ளார்.
மார்த்தாண்டத்தில் உள்ள பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ஏற்பட்ட தேவையற்ற அழுத்தங்கள் காரணமாகவே அங்கிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவிதமான பதவியையும் எதிர்பார்க்காமல் கட்சியின் வளர்ச்சிக்காகக் காத்திருந்தேன்” என்று குறிப்பிட்டார்.
தற்போது பாஜக சார்பில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தொகுதியில் தமக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளதாகத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். விளவங்கோடு தொகுதியில் ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிய அனுபவம் உள்ள விஜயதரணி, இம்முறை தாமரைச் சின்னத்தில் களம் காண்பது குமரி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




