சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பரப்பரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், விகே சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான 5-வது கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பெரும் குழப்பம் வெடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைலாபுரத்தில் துளிர்விட்ட கூட்டணி:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வகையில், ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கிய விகே சசிகலா, தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சந்தித்துப் பேசினார். அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்த ராமதாஸும், சசிகலாவுடன் கைகோர்த்து 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் காணப்போவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் அதிரடியைக் கிளப்பியது.
மயிலாடுதுறையில் மோதல்:
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சவால் விடும் வகையில் அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணியில், தற்போது வேட்பாளர் அறிவிப்பால் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 29-ஆம் தேதி சசிகலா வெளியிட்ட 21 பேர் கொண்ட முதற்கட்டப் பட்டியலில் மயிலாடுதுறை தொகுதிக்கு சுதாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், நேற்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட 5 பேர் கொண்ட பட்டியலில் அதே மயிலாடுதுறை தொகுதிக்கு பாக்கம் சக்திவேல் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார். ஒரே தொகுதிக்குக் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்திருப்பது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னடைவா? பலவீனமா?
முறையான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை முடிக்காமல், அவசர அவசரமாக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிப்பது இந்தக் கூட்டணியின் பலவீனத்தையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எடப்பாடி பழனிசாமியை முடக்க நினைத்த இந்த 5-வது அணி, ஆரம்பத்திலேயே ஒருமித்த புரிதலின்றித் தடுமாறுவது தேர்தலுக்கு முன்பே இவர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமைய வாய்ப்புள்ளது.





