பயணிகள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தூத்துக்குடி – சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம்!
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி – சென்னை இடையே இரவு நேர விமான சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு காலை 8:00 மற்றும் 11:25 மணிக்கும், மதியம் 1:50 மற்றும் மாலை 4:15 மணிக்கும் என நான்கு விமான சேவைகளும், பெங்களூருவுக்கு மதியம் 12:15 மணிக்கு ஒரு சேவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் வசதி கொண்ட A321 ரக விமானங்களை இயக்கவும், இரவு நேரச் சேவைகளை வழங்கவும் கோரிக்கைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது தொடங்கப்பட்டுள்ள இரவு நேர விமான சேவையால், வணிகர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பயணிப்போர் பெரும் பயனடைவதோடு, பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






