ஜெயங்கொண்டம் திமுகவில் வேட்பாளர் விவகாரத்தால் சலசலப்பு: மேற்கு ஒன்றிய செயலாளர் அதிரடி போர்க்கொடி!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் தன.சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பகிரங்கமாகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இம்முறை தமக்குக் கண்டிப்பாகச் சீட் கிடைக்கும் எனப் பெரிதும் நம்பி நேர்காணலில் பங்கேற்றிருந்த தன.சேகர், வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தார். தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமக்குச் சீட் கிடைக்காமல் போனதற்கு அமைச்சர் சிவசங்கர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோரே முழு காரணம் என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
கட்சியை வளர்ப்பதை விட அழிப்பதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பளிக்காமல் பணபலம் உள்ளவர்களுக்கே தலைமை முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தது ஜெயங்கொண்டம் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






