காரைக்குடி அருகே பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குவாதம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் பரப்புரையை முடித்துவிட்டு, புதுவயல் பகுதியில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்திற்குச் சீமான் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கண்டனூர் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படையினர், சோதனைக்காக அவரது வாகனத்தை நிறுத்தினர்.
இதனால் அதிருப்தியடைந்த சீமான், காரில் இருந்து இறங்கி அங்கிருந்த பெண் அதிகாரியிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த மோதல் போக்கினால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.







