சமயபுரம் மாரியம்மன் கோவில் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி: திமுக அரசுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தின் கான்கிரீட் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், தற்போது மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது திமுக அரசின் திருப்பணிகளின் தரமற்ற நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் பல்வேறு புதிய மண்டபங்களைத் திறந்து வைத்ததைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, பக்தர்களின் கோடிக்கணக்கான காணிக்கை நிதியைச் செலவு செய்ததாகக் கணக்கு காட்டும் அரசு, மக்களின் உயிரைத் துச்சமாக நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு அமைச்சர் பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.









