“மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் செல்வேன்” – சேந்தமங்கலம் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன் உறுதி!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வேட்பாளர் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து உற்சாகமாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகரன், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிக முக்கியமான புறவழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் தனது தேர்தல் வாக்குறுதியாக, தொகுதியில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தி பொதுமக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். குறிப்பாக, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறியப் போவதாகவும், அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.








