அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: முக்கிய தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள் போட்டி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முக்கியத் தொகுதிகளுக்குப் பலத்தப் போட்டி நிலவும் வகையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியும், அண்ணாநகர் தொகுதியில் எஸ். கோகுல இந்திராவும் களம் காண்கின்றனர்.
சென்னையின் மற்ற முக்கியத் தொகுதிகளான சேப்பாக்கத்தில் ஆதிராஜாராம், விருகம்பாக்கத்தில் விருகை வி.என். ரவி, மற்றும் தியாகராய நகரில் பி. சத்தியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், துறைமுகம் தொகுதியில் ராயபுரம் மனோ, வேளச்சேரியில் எம்.கே. அசோக், சோழிங்கநல்லூரில் கே.பி. கந்தன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகரில் ஆர்.எஸ். ராஜேஷ், வில்லிவாக்கத்தில் எஸ்.ஆர். விஜயகுமார் மற்றும் முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் பி. சந்தானகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளனர்.
தனித் தொகுதிகளான திட்டக்குடியில் என். முருகுமாறன், திரு.வி.க. நகரில் ஏ. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மற்றும் எழும்பூரில் அபிஷேக் ரங்கசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் திருச்சுழியில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஆலந்தூரில் எஸ். சரவணன் மற்றும் ஆலங்குடியில் தன. விமல் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதிமுகவின் இந்தத் தொடர் வேட்பாளர் அறிவிப்புகள் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளன.








