பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!
கோவை:
பிரதமர் நரேந்திர மோடியின் கேரள வருகையையொட்டி, தமிழகத்தின் கோவை மாநகர் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
இதற்காக நாளை கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டிற்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமரின் இந்தப் பயணத்தையொட்டி, கோவை மாநகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் அவர் பயணிக்கும் வழித்தடங்களான சிந்தாமணிபுதூர், செட்டிபாளையம், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு உள்ளிட்ட இடங்கள் பாதுகாப்பு கருதி ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வினாங்களை இயக்கக் காவல்துறை கடும் தடை விதித்துள்ளது. விதியை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையிலிருந்து கேரளா செல்லும் எல்லைப் பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தால் கோவை மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.








